நிராகரிக்கப்படாத வரையில்
உணரவே முடிவதில்லை-எப்போதும்
உணர்கின்றேன்
நிராகரிப்பின் வலியை...
படிப்புக்காய் வாங்கிய கடனுக்காக
வாசலில் வந்து
வட்டிக்கடைக்காரன்
கொட்டிவிட்டு போகும்
வசவுகளையோ...
ஏளனப்பார்வையோடு
கேலி பேசும் சுற்றத்தாரையோ
ஒருமுறையேனும்சந்தித்திருப்பீர்களா...
தண்டச்சோறு
வெட்டிப்பயல் என்று
படித்து வாங்காத பட்டங்களோடு
வெறுமை கலந்த மனங்களில்
சுயம் மறந்த நினைவுகளோடு
முரட்டுச்சாலைகளில்
இருட்டிய
மனங்களோடு நடந்ததுண்டா..
மயிர் செரைக்க
அறுந்துபோன செருப்புதைக்க
டீ குடிக்க என
அன்றாட தேவைகளுக்கே
கையேந்தும் நிலையெண்ணி
இரவு படுக்கையை
சத்தமின்றி அழுகையால் நனைத்த
அனுபவம் உண்டா...
இரவெல்லாம் கண்விழித்து படித்தும்
இண்டர்வியூ சரியாய் செய்தும்
முன் அனுபவமும்
சலவை செய்தகாந்தி நோட்டுக்களும்கேட்டு
நிராகரிக்கப்பட்டு
வீடு திரும்புகையில்
‘இதுவும்’ கிடைக்கவில்லையா? யென்று
பெற்ற மனது துடிக்கும்வலியை
உள்ளூர உணர்ந்ததுண்டா...
நண்பர்களோடு சிரித்துபேச
பெற்றோர் மடிஉறங்கி
நிம்மதி மூச்சிறங்க
என்றோஒரு நாள்ஓரு வேளை
வாழ்க்கை குறித்த
கனவெல்லாம்
நனவாகுமென்று
இரவு பகலாய்ஏங்கியதுண்டா...
நிம்மதியாய்தூங்கியதுண்டா?...
வேலையற்றவனின்
வேதனை குரல்கள்
நிசப்தம் ஆகாத வரையில்
எப்படி நம்பமுடியும்
சுதந்திரம் யென்பது
சுகப்பிரசவம் தானென்று...